பொறுப்பற்ற சமூக ஊடகங்களின் செயற்பாடு கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி ஆசிரியர்கள் விசனம்
பொறுப்பற்ற சமூக ஊடகங்களின் செயற்பாட்டால் கல்விச் செயற்பாடுகள் வீழ்ச்சி அடைந்து செல்வதாகவும், இவ்வாறான செயற்பாடுகளை உடன் நிறுத்த வலியுறுத்தியும் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி ஆசிரியர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வடமராட்சி கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளருக்கு, அவர்களால் அறிக்கை கையளிக்கப்பட்டது. இதன் பிரதிகள் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடமாகாண ஆளுநர், வடமாகாண கல்விப் பணிப்பாளர், தினகரன். கொம் கொழுப்பு, கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் போன்றவற்றிற்கும் பிரதிகள் அனுப்பப்பட்டுள்ளன.
குறித்த அறிக்கையில்,
தினகரன் . கொம் இல் 07.11.2025 இன்று வெளிவந்த எமது பாடசாலை அதிபர் தொடர்பான காணொளிக்கு எதிர்ப்பு தெரிவித்தல்
மேற்படி அதிபர் தொடர்பாக சாட்டப்பட்ட குற்றங்களில் எதுவித உண்மையும் இல்லை என்பதை தெரிவிப்பதுடன் ஆசிரியர்கள் மாணவர்கள் குழாத்துடன் சுமுகமான தொடர்பாடலே காணப்படுகிறது.
ஒரு சிலரது காழ்ப்புணர்ச்சி காரணாமகவே இவ்வாறான செய்திகள் பரப்பப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இச் செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை. இச் செய்தியினால் இப் பாடசாலையில் பணியில் ஈடுபடுகின்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். எனவே இதற்குரிய சரியான உடனடி நடவடிக்கையினைப் பெற்றுத்தருமாறு கேட்டுக் கொள்கின்றோம். தாமதமாகும் பட்சத்தில் எமது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை சுமுகமான முறையில் மேற்கொள்ள முடியாது என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் இச்செயற்பாட்டின் மூலம் இப்பாடசாலையின் தரம் மேலும் வீழ்ச்சியடையச் செய்யும் என்பதை உறுதிபட கூறிக்கொள்ள விரும்புகின்றோம். எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
