பிரிக்க முடியாத நாட்டுக்குள் தீர்வு வேண்டும்!! -இதுவே தமிழர்களின் எதிர்பார்ப்பு என்கிறார் சுமந்திரன்-
பிரிக்க முடியாத நாட்டிற்குள் தீர்வொன்றை பெற்றுக் கொள்ளவே தமிழ் மக்கள் இன்னமும் தயாராக இருக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடந்த பாராளுமன்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-
அனைத்து மக்களினதும் பன்முகத்தன்மையையும் சமத்துவத்தினையும் அங்கீகரிக்கும் பிரிக்க முடியாத நாட்டிற்குள் தீர்வொன்றினை பெற்றக் கொள்ளவே தமிழ் மக்கள் இன்னமும் தயாராக இருக்கின்றார்கள்.
ஒவ்வொரு மக்களின் சமத்துவம் என்பது அவர்களின் எண்ணிக்கையின் பலத்தில் தங்கியிருக்கவில்லை. எமது ஜனநாயகமானது தப்பித்துக்கொள்ளவும் செழிப்படையவும் வெளிப்படையான பேரினவாதத்தை நோக்கி செல்லாமல் இருக்க வேண்டும் என்றால், இந்த கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றார்.