பாடசாலைகள் மாணவர்களுக்கு நம்பிக்கைக்குரிய இடமாக திகழவேண்டும் – ப.தர்மகுமாரன்
பாடசாலைகள் மாணவர்களுக்கு நம்பிக்கைக்குரிய இடமாக திகழவேண்டும் என வலிகாமம் கல்வி வலய ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் மாணவர்களின் நம்பிக்கைகுரிய இடமாக திகழ்ந்தால் மட்டுமே தனியார்கல்வி நிலையத்தை நாடமாட்டார்கள் என வலிகாம கல்வி வலயத்தின் உடற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார். ஒய்வுபெற்ற உடற்கல்விதுறை சார்ந்தவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு உடுவில் மகளிர் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் பாடசாலைகளில் மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்ததும் நிற்பதை தவிர்க்கின்றனர். இதனால் எந்தவொரு செயல்பாடுகளையும் செய்யமுடியாதுள்ளது. ஒரு சில தனியார்கல்வி நிலையங்கள் ஏழு நாட்களும் ஒய்வின்றி நடத்துகின்றது. இதன்மூலம் மாணவர்களின் ஆற்றல் வெளிப்பாடு இல்லாது போவதோடு ஆளுமையற்றவர்களை உருவாக்கி வருகிறோம். இந்த நிலையைமாற்ற பாடசாலைகளில் கற்றல் செயல்பாட்டை மாணவர்களுக்கு நம்பிக்கைதரும் வகையில் உருவாக்க வேண்டும். பாடசாலையில் கற்றால் சித்திபெறமுடியாது என்றும் தனியார்கல்வி நிலையத்திற்கு சென்றால் மட்டுமே சித்தியடைய முடியும் என்ற மூடநம்பிக்கை பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஏற்பட்டுள்ளது. பாடசாலைகளில் பாடப்பரப்புகள் பூர்த்திசெய்ய மாட்டார்கள் ஆசிரியர்கள் பாடசாலைகளில் ஒய்வு எடுத்துவிட்டு பின்னர் தனியார்கல்வி நிலையத்தில் நன்றாக கற்பிக்கின்றார்கள் என்ற வதந்தி இலவசக்கல்வியை இருள்சூழ வைத்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இல்லையேல் ஏழைமாணவர்களின் கல்வி கானால் நீராவதோடு பாடசாலைகளின் இணைபாடவிதான செயல்பாடுகள் முற்றாக இல்லாதுபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தனியார்கல்வி நிலையங்கள் முன்னரும் இயங்கின ஆனால் பாடசாலைகளின் செயல்பாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமையவில்லை. இன்று அதுபாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. மாணவர்கள் பாடசாலை வளாகத்தினுள் நிற்பது அரிதாகிவிட்டது. எனவே பாடசாலைகள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நம்பிக்கைக்குரிய இடமாகமாறவேண்டும் எனத்தெரிவித்தார்.