நாளை முழுமையான பாடசாலை- அழுத்தத்தில் ஆசிரியர்கள்
ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் செயற்பாடுகளை உடன்நிறுத்துமாறு ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தற்போது வடக்கு மாகாணத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தமது கல்வி வலயத்திலுள்ள ஆசிரியர்களை கருத்தில் கொள்ளாது மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதான செயற்பாடுகளை மேற்கொண்டு, ஆசிரியர்களை வேதனைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வேலை செய்யப் போகிறவர்கள் ஆசிரியர்கள். அவர்களைக் கருத்தில் கொள்ளாது மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளருடனான கலந்துரையாடலையும் , வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அதிபர்கள் உடனான கலந்துரையாடலையும் மேற்கொள்ளப்பட்டு பாடசாலைகள் நாளை திங்கட்கிழமை முழுமையாக நடைபெறும் என தத்தமது viber குழுக்களில் அதிபர்களால் அறிவிக்கப்படுகிறது.
மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அரச வாகனங்கள் உள்ளன. எரிபொருளைப் பற்றி சிந்திக்கத் தேவையில்லை. மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கை வேண்டும், பாடசாலைகள் நடைபெற வேண்டும் எனச் சிந்திக்கும் மாகாண கல்வி பணிப்பாளர், வலயக் கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள் ஏன் ஆசிரியர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு எந்த ஏற்பாடுகளும் எடுக்கவில்லை? மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படக் கூடாது என்பதில் ஆசிரியர்கள் உறுதியாக இருப்பதாகவும், தமக்குரிய எரிபொருளை சுழற்சி முறையிலாவது பெற்றுத் தருமாறும் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆசிரியர்களுடன் அதிபர்கள் கலந்துரையாடல் மேற்கொண்டு நாளை பாடசாலைக்கு வருகை தரக் கூடிய ஆசிரியர்கள் விபரம் எதுவும் சேகரிக்கப்படாது, நாளை பாடசாலை முழுமையாக நடைபெறும் என்ற செய்தியை மட்டும் வெளியிடுவதால், எரிபொருள் இன்மையால் பாடசாலைக்கு செல்ல முடியாத ஆசிரியர்கள் மிகுந்த வேதனை அடைகிறார்கள்.
கல்வி அமைச்சு வெளியிடும் சுற்று நிரூபத்தில் மாகாண கல்வி திணைக்களம், வலயக் கல்வி அலுவலகம், அதிபர்கள் முடிவெடுக்கவும் என அறிவிக்கபட்ட போதிலும் அவர்கள் தமது மாகாணம், வலயம், பாடசாலைகளை கருத்தில் கொள்ளாது வசதியான பாடசாலை நடத்த முடியுமெனின், அனைத்து பாடசாலைகளும் முடியுமென தீர்மானம் எடுப்பது எந்த வகையில் நியாயம் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.