துஸ்பிரயோகம் செய்த பெண்ணை நீதிமன்றில் வைத்து அச்சுறுத்திய வைத்தியர்!! -கைது செய்து சிறைக்கு அனுப்பிய இளஞ்செழியன்-
ஆயள்வேத வைத்திய சாலைக்குச் சென்ற பெண் நோயாளியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு நடைபெற்று வருகின்றது.
வழக்கு விசாரணையின் போது பாதிக்கப்பட்ட பெண் நேற்றைய தினம் நீதிமன்றின் சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சியம் அளித்துள்ளார்.
சாட்சியம் வழங்கிவிட்டு குறித்த பெண் நீதிமன்றிற்கு வெளியே செல்லும் போது வழக்கின் எதிரியான ஆயுர்வேத வைத்தியரினால் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்தே அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
இந்த அச்சுறுத்தலால் நீதிமன்றத்தில் அதீத சத்தம் ஏழுந்துள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குள் நின்று சத்தம் எழுப்புபவர்களை அழைத்து வருமாறு பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் எதிரியான வைத்தியரும், பாதிக்கப்பட்ட பெண்மணியும் நீதிபதி முன் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அப்போது பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிடுகையில், வழக்கின் எதிரியான வைத்தியர் தன்னை அச்சுறுத்தி எச்சரித்ததாக நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர்கள் சாட்சிகள் சட்டத்தின் கீழ் சாட்சியை மிரட்டியதன் காரணமாக எதிரியான வைத்தியருக்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பிணை கட்டளையை நீதிபதி இளஞ்செழியன் ரத்து செய்து எதிரியை வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட அப்பெண்மணிக்கு கந்தளாய் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் எதிரிக்கு எதிராக தன்னை சாட்சியம் அளிக்க வேண்டாம் எனவும், எதிரி ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு தருவார் அதனை பெற்று கொண்டு சமாதானமாக செல்லும் படி கூறியதாகவும் பெண்மணி முறையிட்டுள்ளார்.
அந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிராந்திய பொலிஸ் அதிகாரிக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சாட்சியை மிரட்டிய ஆயுர்வேத வைத்தியர் உடனடியாக கைது செய்யப்பட்டு மறியல்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.