Sun. Apr 12th, 2026

தீவக பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கஷ்டப்பிரதேச கொடுப்பனவுகளை வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

வடமாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள நெடுந்தீவு உள்ளிட்ட தீவக பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கஷ்டப்பிரதேச கொடுப்பனவுகள் வழங்க நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் வடமாகாண கல்வி அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகள் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலினால்
மத்திய கல்வியமைச்சின் செயலாளரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளில் பல பாடசாலைகள் உள்ளன. அப்பாடசாலைகளுக்கு வரும் ஆசிரியர்கள், கடல் வழியாகவும் பயணிக்க வேண்டியுள்ளது. அப்படியிருந்தும், தற்போது அனலைத்தீவில் உள்ள 3 பாடசாலைகளைச் சேர்ந்த 23 ஆசிரியர்களும், ஏழுவைத்தீவில் உள்ள 2 பாடசாலைகளைச் சேர்ந்த 13 ஆசிரியர்களும், நெடுந்தீவு பகுதியிலுள்ள 8 பாடசாலைகளையும் சேர்ந்த 92 ஆசிரியர்களும், நயினாதீவு பகுதியில் உள்ள 3 பாடசாலைகளைச்களைச் சேர்ந்த 46 ஆசிரியர்களும் கஷ்ட பிரதேச படியைப் பெற முடியாமல் உள்ளனர்.

பாடசாலைகளின் வகைப்பாடு சுற்றறிக்கை 01/2024 (1) மூலம் இந்தப் பாடசாலைகள் கஷ்டப்பிரதேச பாடசாலை தரத்திலிருந்து நீக்கப்பட்டருந்தமையே இதற்குக் காரணம். இந்தப் பாடசாலைகள் இணைய வசதிகள், நீர் வசதிகள், பேருந்து போக்குவரத்து போன்ற காரணிகளின் அடிப்படையிலேயே வகைப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் கடல் வழியாகவே இந்தப் பாடசாலைகளை அடையும் காரணிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண கல்வி அதிகாரிகள், கல்வி அமைச்சிற்கு இது தொடர்பான தகவல்களை வழங்கும் போது இந்தக் குறிப்பிட்ட காரணிக்கு எந்த கவனமும் செலுத்தியிருக்கவில்லை.
இந்த நிலைமை காரணமாக, மேற்கூறிய கடல் கடந்த தீவுகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த இடர்ப்பாட்டு உதவித்தொகை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தாங்கள் செய்த இந்தத் தவறை சரிசெய்யாமல் ஆசிரியர்களின் இடர்ப்பாட்டு உதவித்தொகையை வழங்காமல் இருப்பது வட மாகாண கல்வி அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலாகும்.

மேற்கண்ட நிலைமையைச் சரிசெய்யவும், நாட்டிலேயே மிகவும் நெருக்கடியான பாடசாலைகளாகத் திகழும் யாழ்ப்பாணத் தீவுகளில் அமைந்துள்ள இப்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இடர்ப்பாட்டுக் கொடுப்பனவுகளை வழங்கவும் விரைந்த நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

புதிய பாடசாலை வகைப்பாட்டில், பிற மாவட்டங்களில் இடர்ப்பாட்டு கொடுப்பனவுகளைப் பெற்ற பாடசாலைகளும் தங்களது இடர் கொடுப்பனவை இழந்துள்ளன. இந்தப் பாடசாலைகளின் வகைப்பாடு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும், அந்தப் பாடசாலைகள் குறித்தும் ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.

மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஆசிரியர்களுக்கான இடர்ப்பாட்டுக கொடுப்பனவு தொகை உயர்த்தப்பட்டிருந்தபோதிலும், முந்தைய இடர்ப்பாட்டுப் படிகளான ரூ. 2500/- மற்றும் ரூ. 1500/- ஆகியவையே இதுவரை வழங்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், பட்ஜெட்டில் உயர்த்தப்பட்ட இடர்ப்பாட்டுப் படிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் மேலும் கேட்டுக்கொள்கிறோம்.
என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed