தரமின்றி இயங்கும் ஆட்டோக்கள் சேவையில் ஈடுபடத் தடை
உரிய தரமின்றி இயங்கும் முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீர தெரிவித்துள்ளார்.
நேற்று கரவெட்டி பிரதேச சபையில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் முச்சக்கர சாரதிகள் பொலீஸாருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுவோரை எமக்கு அறிவிக்க வேண்டும். இதனால் சாரதிகள் அனைவரும் நன்நடத்தை உடையவர்களாக இருக்க வேண்டும். மேலும் நெல்லியடி நகர் பகுதி நெருக்கமான சூழல் காணப்படுவதனால் முச்சக்கர வண்டிகள் தரிப்படத்திற்கு இடம் ஒதுக்குவது கடினமாக உள்ளது. இருப்பினும் உரியவர்களுடன் கலந்துரையாடி இடத்தை ஒதுக்குவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.