ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு!! -இதுவரை முடிவு செய்யவில்லை: எம்.ஏ.சுமந்திரன்-
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை அறிமுகம் செய்து, அவரின் கொள்கை என்ன வென்பதை வெளிப்படுத்திய பின்னர் அவருடன் நடத்தும் பேச்சுவார்த்தையே தமிழ் தேசிய கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு வழங்கும் என்பதை தீர்மானிக்கும் என்று அக் கட்சியின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வல்வெட்டித்துறையில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட பேச்சாளரிடம் அங்கிருந்த ஊடகவியலாளர் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
இதுவரை கட்சிகள் எவையும் தமது ஜனாதிபதி வேட்பாளர் இவர்தான் என்பதை அறிமுகம் செய்யவில்லை. முதலில் வேட்பாளர்களை அறிமுகம் செய்யட்டும்.
வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் அவரின் கொள்கை வெளிப்படுத்தப்படும். அதன் பின்னர் அவர்களுடன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தும்.
அந்த பேச்சுவார்த்தையின் ஊடாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு வழங்கும் என்பதை முடிவு செய்யும் என்றார்.