சுவிஸ் தூதரக பெண் அதிகாரியை கடத்தவில்லை என்பதை எனது மனச்சாட்சி நம்புவதாயில்லை -சரத் பொன்சேகா
சுவிஸ் தூதரக பெண் அதிகாரியை கடத்தவில்லை என அரசாங்கமும் பொலிசாரும் கூறுவது உண்மையென எனது மனச்சாட்சிக்கு இன்னமும் நம்பும் படியாகவில்லை என சரத் பொன்சேகா தெரிவித்தார் .
நல்ல வேலை , குடும்பம் பிள்ளைகள் என இருக்கும் ஒரு பெண் அதிகாரி புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்ட 10 நாட்களில் தனது உயிர், குடும்பம், பிள்ளைகளின் பாதுகாப்பை பொருட்படுத்தாது இவ்வாறான குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைப்பாரா என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் கேள்வி எழுப்பினார்.
இந்த நாட்டில் மீண்டும் வெள்ளை வான் கலாசாரம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சுவிஸ் தூதரக பெண் அதிகாரியின் கடத்தல் விடயத்தில் வெள்ளைவான் கடத்தல் இடம்பெறவில்லை என்றும் மற்றும் அவர் அச்சுறுத்தப்படவில்லை எனவும் அரசாங்கம் கூறிவந்தாலும், அவர்கள் கூறுவது உண்மையென இன்னமும் எனது மனசாட்சிக்கு நம்பமுடியாமல் உள்ளது. அவ்வாறு நடக்கவில்லை என்றால் அதனை நிருபிக்க அரசாங்கம் சரியான ஆதாரங்களை முன்வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார் .