சுற்றுநிருபத்தின்படி நடாத்தப்படும் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலை மாணவரில் ஆரோக்கிய வாழ்க்கைப் பாதையை ஏற்படுத்தும் என மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட்.
சுற்றுநிருபத்தின்படி நடாத்தப்படும் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலை மாணவரில் ஆரோக்கிய வாழ்க்கைப் பாதையை ஏற்படுத்தும் என மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட்.
கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து வெளியிட்ட பாடசாலையில் ஆரோக்கியமான சிற்றுண்டிச்சாலையை நடத்திச் செல்லும் வழிகாட்டலின் படி நடாத்தப்படுகின்ற பாடசாலைச் சிற்றுண்டிச்சாலை மாணவர்களில் ஆரோக்கியமான வாழ்க்கைப் பாதையை ஏற்படுத்தும் என தெரிவித்தார் பூநகரி மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட்.
பாடசாலை சுகாதார மேம்பாடுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்முகமாக பூநகரிக் கோட்ட பாடசாலை அதிபர்களுக்கான கருத்தமர்வொன்று அண்மையில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் மக்கள் தொகையில் இருபத்தைந்து சதவீதமானவர்கள் பாடசாலை மாணவர்களே. இவர்களை சரியான வழிகாட்டலுக்கு இந்தபராயத்தில் உட்படுத்துவதன் மூலமே எதிர்கால சந்ததியை ஆரோக்கியமானதாக மாற்றமுடியும். அதிக சீனி உப்பு கொழுப்பு போன்றவற்றை உட்கொள்ளும் வாழ்க்கைக் கோலத்தை இந்தப்பருவத்தில் தவிர்த்து இயற்கையான பழங்கள் உள்ளூர் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வாய்புகளை ஏற்படுத்தவேண்டும்.
சிற்ண்டிச்சாலை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை செய்து அது சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை உணவுக்குழு கண்காணிக்க வேண்டும். இதில் அதிபர் ஆசிரியர்கள் பிரதேச பொது சுகாதார பரிசோதகர் சுகாதார சுற்றாடற் கழக மாணவப்பிரதிநிதிகள் பழைய மாணவ பிரதிநிதி மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் அடங்குவர்.
இவர்கள் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலை மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைப் பாதையை ஏற்படுத்தக்கூடியவாறு இயங்குவதை உறுதி செய்யவேண்டும்.
இதிலுள்ள பழையமாணவ பிரதிநிதி பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதி மற்றும் பொது சுகாதார பரிசோதகர் இணைந்து பாடசாலையை அண்டிய சுற்றாடலில் நடாத்தப்படும் வர்த்தக நிலையங்களில் ஆரோக்கியத்துக்கு சவால்விடுக்கும் செயற்கை மென்பானங்கள், பேக்கரி உணவுகள், துரித உணவுகள், அதிக சீனி, உப்பு எண்ணை அடங்கிய பொருட்கள் விற்பனை செய்வதை தவிர்க்க ஆலோசனைகளை வழங்கவேண்டும்.
அதிக சீனி சேர்த்த மென்பானங்கள் மற்றும் உணவுகள் இலகுவாக மாணவர்களை அதற்கு அடிமையாக்கி, இளமையிலேயே அதிக உடற்பருமன் நீரிழிவு, குருதியில் கொலஸ்ரோல் அதிகரிப்பு எனும் தீய விளைவுகளை ஏற்படுத்தி ஆயுளை குறுகியதாகவும் கடினமானதாகவும் மாற்றி விடுகின்றன.
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் தரமான உணவுகையாளும் நிறுவமொன்றுக்கு இருக்கவேண்டிய அடிப்படைச் சுகாதார பாதுகாப்பு கட்டமைப்புக்களை கொண்டிருக்க வேண்டியுள்ளதோடு உணவு கையாளுபவர்கள் நெருப்புக் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதும், உணவு கையாளுபவர்களுக்கான செல்லுபடியான மருத்துவ சான்றிதழை வைத்திருப்பதும், தனிநபர் பாதுகாப்பு அங்கிகளை தூய்மையாக அணிந்து பாதுகாப்பான உணவு கையாளல் நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டியதும் முக்கியமானதாகும்.
சூடான எந்த உணவு பானங்களும் பொலுத்தீன் பிளாஸ்டிக்குடன் தொடுகையுறுவதை தடுக்கவேண்டும். பாடசாலைச் சிற்றுண்டிச்சாலையின் தரத்தை மதிப்பீடுசெய்ய அதற்கான விசேட படிவத்தைப் பயன்படுத்துவது அதன் நிலையை இலகுவாக இனங்காண உதவும் என்றார்.