கோட்டாவுக்கு விடுதலை!! -நீதிமன்றம் இன்று உத்தரவு-

பொதுஜன பரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ச உள்ளிட்ட 8 பேரை எவன்ட் கார்ட் வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக எவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்விழக்கில் மேலும் 7 பேர் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
இவ் வழக்குக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய அவர்களை விடுதலை செய்யுமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.
எவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை வழக்கிலிருந்து முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்படுவதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது.
எனினும், விடுதலை செய்வதற்குரிய ஆவணங்கள் முறையாக இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் அதனால் வழக்கினை இன்றைய தினம் வரை ஒத்திவைப்பதாகவும் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் கடந்த 20 ஆம் திகதி அறிவித்திருந்தது.
எவண்ட் கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான மிதக்கும் ஆயுத களஞ்சிய கப்பலை நடத்தி செல்வதற்கு அனுமதி அளித்ததன் வாயிலாக அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி இந்த வழக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்ப்பட்டுள்ள முறை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகவும், பிரதிவாதியான கோட்டாபய ராஜபக்ஷவை வழக்கில் இருந்து விடுவிப்பதாகவும் மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி, மன்றிற்கு அறிவித்தார்.
எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவிற்கான ஆவணங்கள் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என நீதிமன்றம் இதன்போது அறிவித்திருந்து.
இதற்கமைய மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவு அடங்கிய பிரதி ஒன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
குறித்த உத்தரவிற்கமைய மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவு பிரதி ஒன்றினை இன்றைய தினம் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றிறில் சமர்ப்பித்ததனை அடுத்து கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேரையும் விடுதலை செய்தவதாக நீதவான் அறிவித்துள்ளார்.