குடத்தனை பகுதியில் விவசாய நிலங்களில் குப்பைகளைக் கொட்ட வேண்டாம் என அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள்
வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் விவசாய நிலங்களில் குப்பைகளைக் கொட்ட வேண்டாம் என அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலங்களின் நடுப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதனால் தாம் பெரும் அசெளகரியங்களைச் சந்திப்பதாக விவசாயிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

குப்பை கொட்டப்படும் நிலம் விவசாய நிலமாக இருப்பதுடன் சுமார் 500 மீற்றர் தூரத்தில் குடியிருப்புகளும் உள்ளது. இதில் குப்பைகளை இடுவதனால் பொலித்தீன்கள் பாவனையால் சூழல் மாசடைகிறது. அத்துடன் நாய்களின் எச்சங்கள் என்பவற்றாலும் சூழல் மாசடைகிறது.

இது தொடர்பாக அப்பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதார பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டு இந்த இடம் குப்பை கொட்டுவதற்கு உகந்ததில்லை எனவும் தெரிவித்துள்ளனர். குப்பை கொட்டப்பட்டதனால் நன்னீர் பாதிப்படைந்து வெங்காய பயிர்ச் செய்கை இவ்வாண்டு செய்யமுடியாமல் உள்ளதாகவும் அவர்கள் குறை கூறியுள்ளனர்.

எவ்வித அனுமதியும் பெறாமல் பருத்தித்துறை நகர சபையினரால் விவசாய நிலங்களில் 2024ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு ஆரம்ப மாதங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்ததுடன், இனிமேல் குறித்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதற்கு தாம் அனுமதிக்க மாட்டோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பருத்தித்துறை நகர சபை தவிசாளர் வி.டக்ளஸ் போல் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது தாம் பருத்தித்துறை நகர சபை தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து இதுவரைக்கும் குப்பைகள் எதுவும் கொட்டப்படவில்லை. இது தவிர பருத்தித்துறை நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களின் குப்பைகளை அகற்ற நாம் பெரும் சிரமப்படுகின்றோம். பருத்தித்துறை நகர சபையினரால் பெறப்படும் குப்பைகளை பொருத்தமான முறையில் அகற்றுவதற்கு பொருத்தமான இடத்தைத் தருமாறு வடமாகாண ஆளுநர் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.