கரவெட்டியில் டெங்கு சூழலை ஏற்படுத்தியஉரிமையாளர்களுக்கு 92 ஆயிரம் ரூபா அபராதம்
கரவெட்டி சுகாதார பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய சூழலினை வைத்திருந்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளர்களுக்கு 92 ஆயிரம் ரூபா தண்டப் பணம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் அறவிடப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

கரவெட்டி சுகாதார பணிமனைக்கு உட்பட்ட உடுப்பிட்டி, நெல்லியடி, கரணவாய் பொதுச் சுகாதார பிரிவுகளில் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 12 வீட்டில் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய சூழலினை வைத்திருந்த குற்றச்சாட்டில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை வழக்கு தாக்கல் செய்யப்பட்டு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பேரில் 12 வீட்டின் உரிமையாளர்களுக்கும் 92 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. குறித்த பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால் அப்பகுதிகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் தொடர் கண்காணிப்பு நடைபெறவுள்ளது. எனவே பொதுமக்கள் தமது வீட்டுச் சூழல் மற்றும் வெற்றுக் காணிகள் போன்றவற்றை நுளம்புகள் பெருக்கமடையாமல் இருப்பதற்கு சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறும் சுகாதார பரிசோதகர்களால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
