கபடியில் கிண்ணங்களை வழித்து துடைத்தது வடமராட்சி கல்வி வலய பாடசாலைகள்
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கபடி போட்டியில் அனைத்துக் கிண்ணங்களையும் வடமராட்சி கல்வி வலய பாடசாலைகள் வழித்துத் துடைத்தன.
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கபடி போட்டிகள் இன்று கிளிநொச்சி மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. இறுதியாட்டத்தில் பருத்தித்துறை கலட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலை அணியை எதிர்த்து தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலய அணி மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய பருத்தித்துறை கலட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலை அணி 50:28 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
3ம் இடத்திற்கான போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணியை எதிர்த்து கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணி மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். இருப்பினும் ஆட்ட நேர முடிவில் நுட்பமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணி 28:24 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை கைப்பற்றினர்.