ஒட்டுசுட்டான் ஆலய பரிபாலன சபையின் முன்மாதிரியான செயற்பாடு
அண்மையில் சிறப்புற நடந்து முடிந்த ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையின் முன்மாதிரியான செயற்பாடு குறித்து சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர். இம்முறை திருவிழா காலங்களில் பொலித்தீன், பிளாஸ்ரிக் பொருட்கள் ஆலய வளாகத்தில் மட்டுப்படுத்தப்பட்டமை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருவிழா திட்டமிடல் கூட்டத்தில் பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பிரதேச சபை அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கையையடுத்து இந்த முடிவு எட்டப்பட்டிருந்தது. இதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்ரிக் கோப்பைகள் , சொப்பிங் பைகளுக்கு பதிலாக உக்கக்கூடிய பொருட்களாலான கோப்பைகளும் பைகளும் ஊக்குவிக்கப்பட்டன. கடந்த காலங்களில் திருவிழா காலங்களில் வீசப்படும் பொருட்களால் ஆலய சுற்றாடல் , நீர்ப்பாசன வாய்க்கால் அயலிலுள்ள பாடசாலை, வயல் நிலங்களில் பொலித்தீன் பொருட்கள் அதிகளவில் காணப்பட்டு விவசாய நடவடிக்கைகளை பாதித்ததுடன் டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கும் காரணமாக இருந்தது. இந்நிலையை கருத்திற்கொண்டே இம்முறை ஆலய வளாகத்தில் பொலித்தீன் பிளாஸ்ரிக் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் ஏனைய ஆலயங்களும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டுள்ளனர்.