எள்ளங்குளம் இராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கை- சக்கோட்டையில் கஞ்சா மீட்பு
இலங்கை 4ம் சிங்க படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் தவுலுகல அவர்கள் உட்பட புலனாய்வு துறையினரின் அதிரடி தேடுதல் வேட்டையின் போது கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பியோடிம் உள்ளனர்.
இன்று அதிகாலை 4.20 மணியளவில் வடமராட்சி சக்கோட்டை பகுதியில் வைத்தே கடலூடாக வள்ளத்தில் கடத்தப்பட்ட கஞ்சாவும் வள்ளமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
எள்ளங்குளம் புலனாய்வு சஜிதரன் அவர்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து எள்ளங்குளம் 4ம் சிங்க படைப்பிரிவின் அதிகாரி மேஜர் தவுலுகல உட்பட புலனாய்வு துறையினர் கொண்ட குழுவினர் தேடுதல் வேட்டை நடாத்திய போது இந்தியாவில் இருந்து வள்ளத்தில் கடத்தப்பட்ட 35கிலோ 650 கிராம் கேரள கஞ்சா மற்றும் வள்ளத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பியோடியுள்ளனர். வள்ளம் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர்களுடையது எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடத்தலில் ஈடுபட்ட வள்ளமும் கஞ்சாவும் பருத்தித்துறை பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.