இலவச புகையிரத ஆணைச்சீட்டு நிறுத்தம் – வழங்குமாறு தர்மகுமாரன் கோரிக்கை
தேசியமட்ட விளையாட்டுப் போட்டியில் பங்குகொள்ளும் மாணவர்களுக்கான இலவச புகையிர ஆணைச்சீட்டு வழங்க வேண்டும் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் 27ம் திகதி முதல் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட போட்டிகள் ஆரம்பமாகின்றன.
இந்த தேசியமட்ட விளையாட்டுப் போட்டிக்கு செல்லும் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வந்த இலவச புகையிர ஆணைச்சீட்டு நிறுத்தப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்டமைக்கான காரணம் எம்மால் அறியமுடியாமல் போனாலும் அதனை வழங்குவதற்கு முயற்சி எடுக்கவேண்டிய தார்மீக கடமையுள்ளது. ஏனெனில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய கிராமப்புறப் பாடசாலைகள் தேசிய மட்ட போட்டிக்கு செல்ல முடியாதநிலை உருவாகியுள்ளது. எனவே அவர்காளால் தமது திறைமையை வெளிக்காட்டக் கூடிய சந்தர்ப்பம் இல்லாமல் போகின்றது என வேதனைப்படுகின்றனர். பாடசாலை நிர்வாகமும் இலவச புகையிர ஆணைச்சீட்டு வழமைபோல் கிடைக்கும் என்பதனால் உணவுத் தேவைக்கான நிதியினை மட்டுமே தங்களால் திரட்ட முடிந்தது எனவும் மேலதிக நிதிக்கு யாரிடம் செல்வோம் யாருடன் நோவோம் என புலம்புகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது கிராமப்புற பாடசாலையில் கல்விகற்கும் வறிய மாணவர்களே. வசதியுள்ள பாடசாலைகள் மாற்றுவழியைநாடி போட்டிக்கு செல்வார்கள். வசதியற்ற பாடசாலைகள் போட்டிக்கு செல்லாது விலகிக்கொள்வார்கள். இதனால் வடக்கின் விளையாட்டு சரிவைநோக்கி செல்வது மட்டுமல்லாமல் வசதியுள்ள பாடசாலையை நோக்கி மாணவர்கள் செல்வதற்கு தூண்டுவதுடன், கிராமப்புறப் பாடசாலைகள் வளர்ச்சி அடையாது மூடும் நிலைஉருவாகும். நாம் மீண்டும் எதனை உருவாக்க எத்தனிக்கிறோம். வசதிபடைத்த மாணவர்கள் சாதிக்கவும் வசதியற்ற மாணவர்கள் சாதிக்க முடியாத நிலை. இதனைக் கருத்தில் கொண்டு கெளரவ அமைச்சர், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், கெளர ஆளுநர் கிராமப்புற பாடசாலை மாணவர்கள் தேசியமட்ட போட்டிக்கு செல்வதற்கு புகையிர ஆணைச்சீட்டை பெற்றுக்கொடுக்க ஆவனசெய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.