இந்தியாவுக்கு கடக்கவுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்

நாளை அல்லது நாளை மறுதினம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இந்தியாவின் ஒடிசாவுக்கு அருகே கரையை கடக்கவுள்ளதுடன் 17ம் திகதி வரை கனமழை ஏற்பட வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அறிவித்துள்ளார்.
தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் – நிக்கோபார் தீவுகளுக்கருகே தோன்றிய தாழமுக்கம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இது இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் அதேவேளை வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இந்தியாவின் ஒடிசாவுக்கருகே 16 அல்லது 17 ம் திகதி கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் செறிவான கனமழை எதிர்வரும் 17ம் திகதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை எதிர்வரும் 17ம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருப்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.