இணுவில் கொள்ளை சம்பவம், துரிதகதியில் கொள்ளையர்களை கைது செய்த பொலிஸ்
இணுவிலில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ உத்தியோகத்தரையும் குடும்பப் பெண்ணையும் வரும் செப்ரெம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன், கொள்ளையிடப்பட்ட நகைகள், மடி கணினி, 4 தொலைபேசிகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களையும் சுன்னாகம் பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்துள்ளனர்.
இணுவிலில் உள்ள வீடொன்றினுள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் ஐந்து பேர் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று வீடு ஒன்றினுள் நுழைந்தது. முகத்தை கறுப்பு துணிகளால் மூடிக்கட்டி இருந்த கொள்ளை கும்பல் , கூரிய ஆயுதங்களை கொண்டு வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் வீட்டில் இருந்த மடிக்கணி , தொலைபேசிகள், நகைகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றிருந்தது .
இந்த தாக்குதலின் காரணமாக வீட்டிலிருந்த பெண்னொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் உடனடியாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், தடயவியல் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்த விசாரணைகளை தொடர்ந்து கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற தினமே புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த இராணுவத்தில் பணியாற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டார் . அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் வேறொரு இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டன.
கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் தலைமறைவாகி இருந்த நிலையில் , கொள்ளையிடப்பட்ட பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் தலைமறைவாகியவரின் மனைவி கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர்கள் இருவரும் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் இருவரையும் செப்டம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தொடர்ந்து விசாரணைகளை நடத்திவரும் பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புபட்ட மற்றைய நபர்களை தேடி வருகிறார்கள்