அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்த நிலையிலும் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை என வலி வடக்கு தவிசாளர் சுகிர்தன்
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்த நிலையிலும் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை என வலி வடக்கு தவிசாளர் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
வலி வடக்கு பிரதேசசபையின் உள்ளூராட்சி வார இறுதி நாள் நிகழ்வும் விருது வழங்கலும் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் பன்னாலை வர்த்தலம் விநாயகர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு தலைமையேற்று நடாத்திய வலி வடக்கு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் இவ்வாறு தெரிவித்தார்.
எமது வலி வடக்கு பிரதேசமானது இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருந்து படிப்படியாக விடுவிக்கப்பட்ட போதிலும் 20 சதவீதமான நிலங்கள் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்படாத பிரதேசங்களாக காணப்படுகின்றது.
குறிப்பாக 21 வட்டாரங்களாகக் காணப்படினும் 20 வட்டாரங்களே விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் ஆனாலும்
பலாலி வடமேற்கு மற்றும் பலாலி மேற்கு ஒரு அங்குலம் கூட விடுவிக்கப்படாத நிலையுள்ளது.
இந்த அரசு ஒரு வருடங்களை கடந்த போதிலும் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை தமது காணிகள் விடுவிக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இதற்கு எமது சபை உறுப்பினர்கள் முயற்சியை எடுத்துக் கொண்டுள்ளனர்.
இவற்றோடு எமது தலைமை அலுவலகம் காங்கேசன்துறையில் அமைவதே எமது எதிர்கால இலட்சியமாகும். வரவுள்ள 2026ம் ஆண்டு வரவு செலவுத் திட்டமும் அதை நோக்கியதாகவே அமைந்துள்ளது.
வளமான எமது பிரதேசத்தில் வளங்கள் குறைவாக இருந்தும் தற்போது இலங்கையிலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளிலும் முதன்மையாக செயற்படுகின்றது எனத் தெரிவித்தார்.
